சொற்களை புரிந்துகொண்டதன் பின் அவற்றினை எவ்வாறு ஒரு
வாக்கியமாக அமைத்துக்கொள்வது என்பது முக்கியமான விடையமாகும். தமிழ் மொழியினை பொறுத்தவரை அதன் வாக்கிய அமைப்பு பற்றி அறிந்து கொள்வதற்கு வாக்கியத்தின் மூன்று உறுப்புக்களான எழுவாய், பயனிலை, செயற்படுபொருள் குறித்து முதலில் நன்கு விளங்கிக்கொள்ளுதல் அவசியமாகும். கருத்துள்ள வாக்கியம் ஒன்றினை அமைப்பதில் இவற்றின் பங்களிப்பினை தொடர்ந்து பார்க்கலாம். பொதுவாக வாக்கியம் ஒன்று சொற்கள் சில ஒன்று சேர்வதனால் உருவாகின்றது. இதனால் சொற்றொடர்...
என்ற பதமும் பயன்படுத்தப்படுவதுண்டு. ஒரு வாக்கியம் அடிப்படையில் எழுவாய் பயனிலை உறுப்புக்களை கொண்டிருக்கும். எப்படியேனும் செயற்படுபொருள் என்ற மற்றுமோர் உறுப்பும் வாக்கியத்தில் இணைந்து வாக்கியத்தின் முக்கிய உறுப்புக்களை மூன்று வகையாக பிரிக்கலாம். ஒரு வாக்கியத்தை பொறுத்தவரை அது தோன்றுவதற்கும் அவ்வாக்கியத்தில் நடைபெறும் செயலை செய்பவரை காட்டுவதற்கும் எழுவாய் முக்கியமானது.
‘கண்ணன் மரத்தை வெட்டினான்’ என்ற வாக்கியத்தில் வெட்டுதல் என்ற செயற்பாட்டினை செய்யும் கண்ணன் என்ற பெயர்ச்சொல்லினை எழுவாயக குறிப்பிடுகிறோம். இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒரு விடையம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெயர்ச்சொற்களே எழுவாயக வருவதுண்டு. சிலவேளைகளில் மிகவும் அரிதாக நிகழ்கால வினையெச்சங்களும் எழுவாயாக வருகின்றன. அத்தோடு சில வாக்கியங்களில் பல எழுவாய்கள் காணப்படலாம். அப்படியான சந்தர்ப்பங்களில் அவ்வாக்கியத்தின் பயனிலை பன்மையில் முடிவடைவதனை நீங்கள் காணலாம். அடுத்ததாக பயனிலை பற்றி பார்ப்போம். ஒரு வாக்கியத்தில் எழுவாய் செய்கின்ற தொழிலை குறித்து நிற்பது பயனிலை எனப்படும்.
ஒரு வாக்கியத்தை பொருளுடையதாக முடித்துவைப்பதும் பயனிலையே. உதாரணமாக ‘கண்ணன் ஓடினான்’ என்ற வாக்கியத்தில் கண்ணன் என்ற எழுவாயின் ஓடுதல் என்ற தொழிலினை காட்டி வந்த ‘ஓடினான்’ என்பதே பயனிலை. பயனிலை காலம் காட்டும். ஒரு வாக்கியத்தில் எழுவாய் ஒரு செயலை செய்கின்றது. எழுவாய் செய்கின்ற செயலை பயனிலை காட்டிநிற்கிறது. எனவே செயலினை செய்தவர் எழுவாயகவும் செயல் பயனிலையாகவும் இருக்கின்ற போது அச்செயல் எதன்மீது செய்யப்பட்டது? அல்லது அச்செயலினை ஏற்கும் பொருள் எதுவோ அதுவே செயற்படுபொருள் எனப்படும்.
உதாரணமாக ‘கண்ணன் மரத்தை வெட்டினான்’ என்ற வாக்கியத்தில் யார் வெட்டினான்? என்ற வினாவுக்கான விடை எழுவாய். கண்ணன் என்ன செய்தான்? என்ற வினாவிற்கான விடை பயனிலை. கண்ணன் எதை வெட்டினான்? என்ற வினாவிற்கான விடை செயற்படுபொருள் என கொள்க. எனவே செயற்படுபொருள் என்பது பயனிலைக்கு முன்னால் எதை? யாரை? எவற்றை? போன்ற வினாக்களை இட்டு கேட்கப்படும் கேள்விகளுக்கு கிடைக்கும் விடையாகும். பல சந்தர்ப்பங்களில் செயற்படுபொருள் வெளிப்படாமலும் கருத்துள்ள வாக்கியங்கள் அமைந்துவிடுவதுண்டு என்பதனையும் கவனத்தில் கொள்க.
"தமிழில் வாக்கிய உறுப்புக்கள் தொடர்பான அடிப்படை விளக்கம். மேலும் விரிவான விளக்கத்திற்கு இலக்கண நூல்களை பாருங்கள்."

















