எழுத்து இலக்கணம் என்பது எழுத்துக்களின்
எண், பெயர், பிறப்பு முதலிய தன்மைகளை கூறுவன. மொழிக்கு முதற்காரணமாய் காதாற் கேட்கப்படும் ஒலி அணுத்திரனில் காரியமாய் இருப்பது எழுத்தாகும். இவ் எழுத்துக்கள் ஒலி, வரி வடிவங்கள் கொண்டவை. ஒலி வடிவின் எழுத்துக்கு அடையாளமான ஒரு குறியீடாகவே வரிவடிவம் அமைகின்றது. தமிழில் 247 எழுத்துக்கள் உண்டு. அவை உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர் மெய் எழுத்துக்கள் 216 மற்றும் ஆயுத எழுத்து 1 என்பனவற்றை...
கொண்டுள்ளன. இவ் எழுத்துக்கள் அனைத்தினையும் முதல் எழுத்துக்கள் சார்பெழுத்துக்கள் என இரண்டு வகையாக . பிரிக்கலாம் உயிர் எழுத்துக்கள் 12 மற்றும் மெய் எழுத்தக்கள் 18 ம் சேர்ந்து 30 எழுத்துக்கள் தமிழில் முதல் எழுத்துக்கள் எனப்படுகின்றன. மொழிக்கும் பிற எழுத்துக்கள் தோன்றுவதற்கும் இவை ஆதாரமாக அமைவதனால் இவை முதல் எழுத்துக்கள் எனப்படுகின்றன.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்ற 12 எழுத்துக்களும் உயிர் எழுத்துக்களாகும். க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்ற 18 எழுத்துக்களும் மெய் எழுத்துக்களாகும். இங்கே குறிப்பிடப்பட்ட உயிர் எழுத்துக்கள் 12 னை மேலும் குறில், நெடில் என இரண்டுவகையாக பிரிப்பதுண்டு. குறுகிய ஓசையுடன் ஒலிக்கும் அ, இ, உ, எ, ஒ என்பன குறில் எனவும் நீண்ட ஓசையுடன் ஒலிக்கும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள போன்றன நெடில் எனவும் அழைக்கப்படும்.
மெய் எழுத்துக்கள் அவை ஒலிக்கும் முறையினை கொண்டு வல்லினம் (க், ச், ட், த், ப், ற்), மெல்லினம் (ங், ஞ், ண், ந், ம், ன்), இடையினம் ( ய், ர், ல், வ், ழ், ள்) என மூன்றாக வகைப்படுத்தப்படுகின்றன. அதாவது வலிய ஓசை, மென்மையான ஓசை, இடைப்பட்ட ஓசை கொண்டவை என்பது அதன் பொருளாகும்.
தமிழ் எழுத்துக்களில் சில தாமே இயங்கும் இயல்பு அற்றவை அவை முதல் எழுத்தக்களின் துணை கொண்டே இயங்குகின்றன. இவ் எழுத்துக்களை 1) உயிர்மெய் 2) ஆய்தம் 3) உயிரளபெடை 4) ஒற்றளபெடை 5) குற்றியலுகரம் 6) குற்றிய லிகரம் 7) ஐ காரக் குறுக்கம் 8) ஒளகாரக் குறுக்கம் 9) மகரக் குறுக்கம் 10) ஆய்தக் குறுக்கம் என 10 வகையாக பிரித்து கூறுவர்.
தமிழில் உயிர் எழுத்துக்கள் 12 உடன் மெய் எழுத்துக்கள் 18 சேர்வதினால் (12 *18 = 216) 216 உயிர்மெய் எழுத்துக்கள் தோன்றுகின்றன. (உதாரணம் : க் + அ = க, க் + ஆ = கா க் + இ = கி க்+ஈ = கீ க் + உ = கு) தனி நிலை எழுத்து என அழைக்கப்படும் ஆய்த எழுத்து
ஒன்றும் ( ஃ ) தமிழில் உண்டு இது தனக்கு முன்னே ஒரு குற்றெழுத்தையும் தனக்கு பின்னே ஒரு வல்லின உயிர் மெய் எழுத்தையும் துணையாக கொண்டு வரும். ( உதாரணம் : அஃது, இஃது, எஃது )
தமிழ் மொழியில் ஒரு பொருளை கண், கை அல்லது கருத்தால் குறிப்பிட்டு காட்டி உணர்த்தும் வகையில் வரும் எழுத்து சுட்டெழுத்து எனப்படும். அந்தவகையில் அ, இ, உ என்ற மூன்றும் சுட்டுப் பொருளில் வந்தால் சுட்டடெழுத்துக்கள் என அழைக்கப்படும். ( உதாரணம் : அவன், அது, இவன், இது, உவன், உது ) இதனையும் அண்மைச் சுட்டு ( இது, இவன்) சேய்மைச் சுட்டு ( அது, அவன்) என இருவகையாக பிரிக்கலாம்.
தமிழில் ஆ, எ, ஏ, ஓ, யா என்ற ஐந்து எழுத்துக்கள் வினா பொருளை உணர்த்துவதனால் அவை வினா எழுத்துக்கள் எனப்படுகின்றன. ( உதாரணம் : அவனா? (ஆ), எது? (எ), அவனோ? (ஓ), யாது? (யா) ) இவ் எழுத்துக்களையும் வினாவில் இடம்பெறும் இடத்தினை கொண்டு சொல்லின் முதலில் வருவன (எ, ஏ, யா ) , செல்லின் இறுதியில் வருவன ( ஆ, ஓ, ஏ ) இரண்டிலும் வருவன ( ஏ – அன்றே? ) என மூன்று வகையாக பிரிக்கலாம்.
தமிழில் உள்ள இவ்வாறான 247 எழுத்துக்களையும் அவை ஒவ்வொன்றையும் உச்சரிக்கும் கால அளவினை மாத்திரை என்று கூறுவர். அந்த வகையில் குற்றெழுத்துக்கள் ஒரு மாத்திரையினையும், நெட்டெழுத்துக்கள் இரண்டு மாத்திரையினையும், மெய் எழுத்துக்கள் அரை மாத்திரையினையும், ஆய்த எழுத்து அரை மாத்திரையினையும் கொண்டது.
தமிழ் மொழியின் சொல்லுருவாக்கத்தில் 12 உயிர் எழுத்துக்களும், க், ச், த், ந், ப், ம், ய், வ், ஞ், ங் போன்ற 10 உயிரோடு இணைந்த மெய் எழுத்துக்களுமே சொல்லின் முதலில் வரும் எழுத்துக்களாகும்.
இக்கட்டுரை..
- வாசகர் பார்வை: 6753
- இணைக்கப்பட்டது: Thursday, 23 July 2009 00:16 இணைத்தவர் Administrator [Rathees]
- கட்டுரை இல: 117


















