தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாடசாலை மாணவர்களும் கையடக்கத் தொலைபேசியும்.

E-mail

தகவல் தொடர்பு சாதனங்கள் என்பது கருத்தை அல்லது தகவலினை ஓரிடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு பரிமாற்றம் செய்ய உதவும் கருவிகள் எனக்குறிப்பிடலாம். ஆரம்ப காலங்களில் இருந்தது போல ஒருவருடனான பேச்சு, சம்பாசனை, கூட்டங்கூடல் போன்ற வழிமுறைகளினாலான தொடர்பாடல்கள் இன்று அருகிவிட்டது. அத் தொடர்பாடலினை கருவிகளின் வழி நாம் மேற்கொள்கின்ற போது அவை தொடர்புசாதனங்களாகி விடுகின்றன. அத்தோடு இத் தொடர்புசாதனங்களின் வழி பெறப்படும் தகவல் பரிமாற்றமானது எத்தகைய தடங்களும் இன்றி ஒருவரை சென்றடைகின்ற போது தான் அவை சமூகத்தில்...

பயனளிக்கின்றன அல்லது முழுமை பெறுகின்றன. இத் தகவல் தொடர்பு சாதனங்களில் தொலைபேசி, இணையம் முக்கியத்துவம் பெறுகின்றன.


மனிதனின் அடிப்படைத் தேவைகளில் தகவல் பரிமாற்றம் திகழ்கின்றது. இத் தொடர்பாடல் சாதாரண கண்ஐhடை முதல் இணையத்தில் தொடர்பு கொள்வது வரை எந்தவகையிலும் அமையலாம். அதேபோல் பரிமாறிக் கொள்ளப்படுகின்ற தகவல் இப்படித்தான் அமைய வேண்டும் எனும் கட்டாயம் இல்லை. தகவல் எவ்வகையிலும் ஒழுங்காக சென்றடைந்தால் அது தகவல் பரிமாற்றமாக கொள்ளப்படும். இத் தகவல் பரிமாற்றம் இல்லையேல் மனிதன் பூரணத்துவமான ஒரு மனிதனாக வாழமுடியாது. மனிதன் ஒரு சமூகப்பிராணி எனும் நிலையில் சமூகத்தின் செல்வாக்கிற்கு உட்படாமல் அவனால் வாழமுடியாது. மொழி பழக்கவழக்கங்கள் ஒழுக்க முறைகள் கருவிகளின் பயன்பாடு ஆகிய அனைத்தையும் அவன் சமூகத்தில் இருந்து பெற்றுக் கொள்கின்றான். இதனால் இன்றைய தொழில்நுட்ப யுகத்தினைக் கொண்ட சூழலில் தொடர்பு சாதனங்கள் ஒருவனது நடத்தையில் பலவாறாக செல்வாக்குச் செலுத்தும் தன்மையினை நாம் நோக்கமுடியும்.

கையடக்கத் தொலைபேசி நமது சமூகத்தில் எங்கும் நிறைந்திருக்கின்றது. அவைகளுக்கு தடைகள் இல்லை.இன்று பெருகி வரும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் நினைத்தவுடன் அதே கணத்தில் அழைப்புக்களை மேற்கொள்ளவும், குறுந்தகவல்களை (SMS) அனுப்பவும் பெறவும் முடிகின்றது. மேலும் விம்பங்களாகவும், ஒளி, ஒலி முறைகளிலும் தகவல்களை வெளிக்கொணர்ந்து தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடிகின்றது. இவை இன்று பாடசாலை மாணவர்கள் மத்தியில் சிந்தனையின் மையப் புள்ளியாக விளங்குகின்றது. அவர்களின் அன்றாட வாழ்வியல் அம்சங்களில் பண்பாடு, விழுமியம், நெறிமுறைகள், கலாசார அம்சங்கள், உணவு பழக்க வழக்கங்கள், உறவு முறைகள் என அனைத்து அம்சங்களிலும் பாரிய தாக்கத்தினை செலுத்துவதாக அமைகின்றது.


இன்று பாடசாலை மாணவர்கள் தாமாகவே விரும்பியோ விரும்பாமலோ இக்          கையடக்கத் தொலைபேசியின் ஆட்சிக்குள் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு நேரத்தினை கடமைகளை மறந்து செயற்படுகின்ற அளவுக்கு சமூகத்தில் இதன் ஆக்கிரமிப்பு அதிகரித்து விட்டது. இவ்வாறு அவர்களின் வாழ்வியல் அம்சங்களில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துவதாக இன்று விமர்சிக்கப்படுகின்றது. பாடசாலை மாணவர்களின் நேரம் வீண் விரயம் செய்யப்படுவதுடன் கற்றலின் பெறுமதி தேவையின், இலக்கின் முக்கியத்துவம் குறைக்கப்படுகின்றது. இவர்களிடையே சமூக அக்கறை பற்றிய சிந்தனைகள் இல்லாது போவதுடன் தமது பொறுப்புக்கள், கடமைகள், எதிர்கால திட்டங்கள் பற்றி சிந்திக்கும் தன்மை முதலானவை கையடக்கத் தொலைபேசி பாவனையால் குறைந்துள்ளது.


அறிமுகமானவர்கள், உறவினர்கள், நண்பர்களுடன் உரையாடுவது போதாதென்று முகம் தெரியாதவர்களுடன் கூட தொடர்பு வைத்திருப்பதால் தவறான பாதையை தேர்ந்தெடுக்கவும், கலாசார பண்பாட்டு சீர்கேடுகள் ஏற்படவும், உறவுகளுக்கு இடையில் புறக்கணிப்புக்கள், உளப்பாதிப்புக்கள், என்பனவும் ஏற்படுகின்றது. மேலும் வன்முறை மனப்பாங்குகளும் வளர்கின்றது. குற்றச்செயல்களும் இதனால் அதிகரிக்கின்றது. அதாவது  கையடக்கத் தொலைபேசியை வைத்திருப்பது கௌரவமாக இவர்கள் மத்தியில் காணப்படுவதால் அதனை திருடுவதற்கும் இவர்கள் பின்நிற்பதில்லை. மேலும் கையடக்கத் தொலைபேசி கணக்கை மீள்நிரப்ப (Reload or Recharges)  செய்ய வீட்டில் பணம் கொடுக்காத சந்தர்பத்தில் வீட்டிலேயே திருடுகின்ற தன்மையும் இவர்களிடம் அதிகரிப்பதனால் பல சிறிய குற்றங்களை இலகுவாக செய்ய கற்றுக்கொள்கின்றனர்.


எனவே மேற்குறிப்பிட்ட வகையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் கையடக்கத் தொலைபேசி அவர்களது வாழ்வியல் அம்சங்களில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தவதனை அறியமுடிகின்றது. இன்றைய நிலையில் கையடக்கத் தொலைபேசி பாவனை உலகளாவிய ரீதியில் பரந்துபட்டவிடயமாக காணப்படுகின்றது. பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து, பாதுகாப்பு கருதி அவர்களுக்கு பெற்றோர்களால் அளிக்கப்படும் கையடக்கத் தொலைபேசியே அவர்களை பல சமூக பிரச்சினைகளை எதிர்நோக்க வழி வகுக்கின்றது. ஏனைய Video clips, MP3 Songs, Video Games  என பல தரப்பட்ட விடயங்களால் கவரப்பட்ட மாணவர்கள் மணிக்கணக்காக தங்கள் பெரும் பொழுதை இதில் கழிக்கின்றனர். தேவைக்கென பாவிக்கும் நிலை போய் எந்த நேரமும் கையில் அதை வைத்துக் கொண்டு நேரத்தையும், மன ஆரோக்கியத்தையும் பெருமளவில் பாதிக்கின்றது. மேலும் அண்மைக்காலத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளில் குரல் மாற்றி (Voice Changer) பேசும் வசதி காணப்படுவதால் பல பிறழ்வு நடத்தைகள் ஏற்படுகின்றது.


இதனால் இதனை தவிர்க்க ஆசிரியர்களும், பெற்றோர்களும் வழிகாட்ட வேண்டும். கண்டிப்பதன் மூலம் எந்தவொரு செயலையும் நாம் தடுத்து விட முடியாது. நல்ல புத்தகங்களை வாசிக்கவும், பெற்றோர், உறவினர்களுடன் நட்புறவாக வளர்வதற்கு எல்லாமே இந்த வழிகாட்டல் அவசியம். இன்று உலகம் முழுவதுமே  கையடக்கத் தொலைபேசிகளில் பாடசாலை மாணவ சமூகத்தை தம் கைப்பிடிக்குள் வைத்துள்ளது. எனவே அதற்கு அடிமையாகி விடாது திட்டமிட்டு செயற்படுவதன் மூலம் கல்வியிலும், ஆளுமை விருத்தியிலும் நல்ல முன்னேற்றத்தை எட்ட முடியும். பாடசாலை நேரங்களில் மாணவர்கள் இதனை பாவிப்பது இனங்காணப்பட்டு இலங்கையில் அனேக பாடசாலைகளில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பாட நேரங்களில் ஆசிரியர்களும் கையடக்கத் தொலைபேசியை பாவிப்பதனை தவிர்ப்பதன் மூலமாக அவர்களுக்கு முன்னோடியாக திகழலாம். மேலும் பாடசாலையை விட்டு திரும்பியவுடன் நண்பர்களுடன் அரட்டை அடிக்க கையடக்கத் தொலைபேசியை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்துவிடுகின்றனர். இவர்கள் இதனை தவிர்த்து கொள்ளல் நன்று. ஏனெனில் பாடசாலையிலும், தனியார் வகுப்புகளிலும் அவர்களுடன் பேசிவிட்டு தான் வீடு திரும்பியிருப்பார்கள். எனவே வீட்டுக்கு வந்ததும் மீண்டும் பாடங்களை படிக்கலாம் அல்லது ஓவியம், நடனம், விளையாட்டுகளில் கவனத்தை செலுத்துவதன் மூலம் ஆளுமையை விருத்தியடையச் செய்யலாம்.


பொதுவாகவே கையடக்கத் தொலைபேசி தகவல் தொடர்பு சாதனங்களுள் மக்கள் மத்தியில் முக்கியமானதொரு சாதனமாக மாறியுள்ளது. இது சமூகத்தில் பகுதியளவில் வேலையை இலகுவாக்குதல், தொடர்பாடலை இலகுவாக்குதல் போன்ற சாதகங்களுக்காக பயன்படுத்தினாலும் இது பாடசாலை மாணவர்கள் மத்தியில் சமூக சீர்கேட்டினை தூண்டுகின்றது. எதிர்காலத்தில் இதன் வளர்ச்சி சமூக நலனை மேம்படத்தாமல் மாறாக பாதகமான விளைவுகளை எற்படுத்தகின்றது. தகவல் தொடர்புகள் பயன்படுத்த வேண்டியது இன்று பல்வேறு குற்றச் செயல்களுக்கும், ஒழுக்க சீர்கேடுகளுக்கும் துணை போகின்றது. இதன் பாவனை பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகரித்த நிலையில் நாகரீகம் என்ற போர்வையில் கலாசாரத்தினை சீரழிக்கும் தன்மையை கொண்டு காணப்படகின்றது. இவ்வாறாக பாடசாலை மாணவர்கள் அன்றாட வாழ்வியலில் அம்சங்களில் மிகுந்த பாதிப்பினை பிறழ்வுகளை ஏற்படுத்தியுள்ளது.


இது சமூகத்தில் பல சமூக பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றது என்பதையும் இதன் மூலமாக அறியக்கூடியதாக உள்ளது. கடந்த காலங்களில் இதன் தேவை குறைவாகவே காணப்பட்ட போதிலும் இன்று பாடசாலை மாணவர்கள் மத்தியில் அத்தியவசிய பொருளாக மாறிவிட்ட நிலையில் அதனது விளைவுகள் ஆழமானதாகவே அமைகின்றன. இதனை கவனத்தில் கொண்டு பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வி, எதிர்கால நலன் என்பவற்றிக்கு முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டும் என்பதுடன் இவ் கையடக்கத் தொலைபேசி மூலமாக தேவையற்ற பாவனையை குறைப்பதனையும், அந்நிலையை மாற்றுவதற்காக அதாவது அதற்கு அடிமையாகும் தன்மையை மாற்றும் வழிவகைகளை விழிப்புணர்வினை ஏற்படுத்தி தம் பிள்ளைகளை நேரான பாதைக்கு இட்டுச் செல்வது அவசியமானதாகும். பாடசாலை மாணவர்களின் ஆளுமை விருத்தியில் அதிக அக்கறையும் மாணவ சமூகத்திற்கு செழிப்பான கல்வி வளம், எதிர்காலம் சிறப்பான முறையில் அமைவற்கும் இக் கையடக்கத் தொலைபேசி தாக்கத்தில் இருந்து விடுபட சகலரும் சிந்திப்பதும் கடமை உணர்வுடன் செயற்பட வேண்டியதும் அவசியமாகும்.

இக்கட்டுரை..

  • இணைக்கப்பட்டது: Friday, 19 March 2010 10:24 இணைத்தவர் Rathees
  • கட்டுரை இல: 228
Last Updated on Friday, 19 March 2010 11:12  
கட்டுரையினை எழுதியவர்: Nilla

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

சரியான விடையத்தை சரியான இடத்தில் சரியான வழியில் செய்வதில்தான் வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது.

- அர்னோல்ட் எச் கிலாசோவ்


Welcome Writers..

OUR AGE NOW..

USER NETWORK..


காப்புரிமை: 2008 - 2012, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.