நிலத்தினை வந்தடையும் மழைநீரின் ஒரு
பகுதி நிலத்தின் மேற்படை மண்ணினால் உறிஞ்சிக்கொள்ளப்படுகின்றது. இவ் உறுஞ்சல் அளவு அப்பகுதியின் மண்ணின் தன்மை மற்றும் உக்கல்களின் அளவு என்பனவற்றினை பொறுத்து வேறுபடுகின்றது. இவ்வாறு உறுஞ்சப்பட்ட நீரைத்தவிர ஏனையவை ஆவியாக்கம் மற்றும் கழுவு நீரோட்டங்களாக மாறுகின்றன. பிரதேசத்தில் நீரினை ஊடுபக விடக்கூடிய பாறைப்படை அமைந்து காணப்படும் போது மற்றுமோர் செயற்பாடும் நடைபெறுகின்றது. அதாவது மழைநீரானது நிலத்தின் அடிவரை சென்று...
தேங்குகின்றது. இவ்வாறு நிலத்திற்கு அடியில் துளைகள், பிளவுகள், மூட்டுக்கள் தோறும் நிறைந்திருக்கும் நீரினை நாம் நிலத்தடி நீர் என்கின்றோம். நிலத்தில் ஈரமான மண்படைக்கு கீழ் பாறையில் நீர் தேங்கியுள்ள மட்டமானது நிறை நீர் மட்டமாகும். பருவகாலங்களுக்கு ஏற்ப இந்த நீர் நிரம்பல் மட்டங்கள் வேறுபடுவதுண்டு.
மழைநீரானது இந்த நீர்ப்பீடங்களை சென்றடைவதற்கு முன்பு மேற்பரப்பு மண்படை ஈரலிப்படைவது அவசியமாகின்றது. இதனால் கோடையில் பெய்யும் சிறிய மழை நிலத்தடி நீர் மட்டத்தில் எந்தவித மாற்றங்களையும் குறிப்பிடத்தக்களவு ஏற்படுத்திவிடுவதில்லை. நீர் நிரம்பல் மட்டங்களை பொறுத்தவரை எப்போதுமே ஓர் எல்லை உண்டு அதை தாண்டி நீர் உயர்ந்துவிடுவதுமில்லை வற்றிவிடுவதுமில்லை என்பதை கவனத்தில் கொள்க. இவ்வெல்லைகளை மீறும் போது நீர்சார் பிரச்சினைகள் தோன்றுகின்றன.
நிலத்தடி நீர் தனது மட்டத்தினை காட்டிலும் அதிகமாக வற்ற ஆரம்பிக்கின்றபோது கடல் நீர் உட்புக ஆரம்பிக்கின்றது. இவ்வாறு தேங்கியுள்ள நிலத்தடி நீரானது நீர் உட்புகவிடக்கூடிய பாறைகளும், நீர் உட்புக விடாத பாறைகளும் சந்திக்கின்ற பகுதிகளில் இயற்கையான ஊற்றுக்களாக வெளிப்படுவதுண்டு. இவை தவிர செயற்கையான முறையில் நிலத்தடி நீர் மட்டம் வரை தோன்டப்படும் கிணறுகளில் ஊற்றுக்களாக வெளிப்படுகின்றன.
ஆர்ட்டீசியன் கிணறுகள் பற்றி நீங்கள் அறிந்திருக்கக்கூடும். மேல்நோக்கி வில்வடிவில் அமைந்துள்ள வன்பாறைப்படை ஒன்றின் மீது அமைந்துள்ள நீர் உட்புகவிடக்கூடிய பாறைப்படையும் அதன் மேல் களிமண் படையும் அமையப்பெறும்போது அக் களிமண் மேற்பரப்பில் தோன்றப்படும் கிணறுகளில் நீரானது நிலமட்டம் வரையுமோ அல்லது அதற்கு மேலோ வெளிவர ஆரம்பிக்கின்றது.
இவ்வாறான கிணறுகள் ஆர்ட்டீசியன் கிணறுகள் எனப்படுகின்றன. மழைநீரானது சுண்ணக்கற்பகுதிகளில் விரைவில் நிலத்தடி நீராக சென்று தேங்கிக்கொள்கின்றது. வளிமண்டலத்தில் உள்ள காபனீரொட்சைட்டினை தன்னகத்தே கொண்டு சுண்ணக்கற்பாறைகளின் வழியே கசிகின்றபோது சுண்ணக்கற்பாறைளின் காபனேற்றை கரைசலுக்கு உட்படுத்துகின்றது. இதனால் சுண்ணக்கற்பாறைகளை கொண்ட பிரதேசங்களில் பலவகை நிலவுருவங்கள் தோற்றம் பெறுவதண்டு.
பாறைகளின் சிறு வெடிப்புக்களின் ஊடே கசிகின்ற மழைநீரானது காலப்போக்கில் அவற்றினை கரைசலுக்கு உட்படுத்தி தனது வழியினை பெருப்பித்துக்கொண்டு நிலக்கீழ் அருவிகளாக பாய்கின்றன. உலகின் சில சுண்ணக்கற் பகுதிகளில் இவ்வாறான நிலக்கீழ் அருவிகள் பல மைல் தூரங்களுக்கு பாய்கின்றன.
இதே போன்று மேற்பரப்பின் சிறு துவாரங்களின் ஊடாhக நலத்தின் கீழ் செல்லும் நீரானது காலப்போக்கில் உள்ளே அகன்ற குகைளை உருவாக்கி அதிகளவான நீரினை கொள்ளக்கூடியதாக மாற்றிவிடுகின்ற இத்தகைய நிலவுருவங்கள் விழுங்குதுளைகள் என அழைக்கப்படுவதுண்டு. நிலக்கீழ் குகைகள் தொடர்பில் சுண்ணக்கற்பகுதிகளில் நிலத்தடி நிலவுருவங்களில் காபனேற்றுப்படிவகளினால் உருவாகும் கசிதுளி வீழ் படிவுகள். கசிதுளி படிவுகள், தூண்கள் என்பனவும் இங்கு குறிப்பிடத்தக்கன. பொதுவாக. சுண்ணக்கற் பிரதேசங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்வரை கழுவு நீரோட்டம் என்பது பெரியளவில் சாத்தியப்படுவதில்லை.
இக்கட்டுரை..
- வாசகர் பார்வை: 529
- திருத்தியமைக்கப்பட்டது: 6 தடவைகள்
- இணைக்கப்பட்டது: Sunday, 13 September 2009 00:00 இணைத்தவர் Administrator [Rathees]
- கட்டுரை இல: 173
















