தமக்குக் கிடைத்த
செல்வங்களில் விலை மதிப்பற்ற செல்வம் குழந்தைச்செல்வம் என்று ஏழை முதல் பணக்காரன் வரை நினைக்கின்றான். இதனால்த் தான் குழந்தைகளை “நடமாடும் தெய்வங்கள்” என்கின்றார்கள். குழந்தை வளர்கின்ற பருவத்தில் உடல் நலமும், மன நலமும் பெற்றிருத்தல் வேண்டும். அவ்வாறு பெற்றிருக்கின்ற குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், ஆளுமையுடைய குழந்தைகளாகவும் வளர்ந்து தேசத்தைக் கட்டியெழுப்பும் மாமனிதர்கள் ஆகின்றார்கள். மாறாக, குழந்தைப் பருவத்தில் ஏதாவது சிக்கல்கள் ஏற்படின் அது மன நலத்தையும், அதன்...
பண்புகளையும், உடல் நலத்தையும் அப்பருவத்திலும், பிற்கால வாழ்க்கையிலும் வெகுவாக பாதிக்கின்றது. இதைப் பெற்றோர் முக்கியமாக அறிந்து, குழந்தை வளர்ப்பில் ஈடுபட வேண்டும்.
“அன்றைய நாளைக் காட்டும் காலை நேரம் போல வருங்கால மனிதனைக் காட்டுகிறது குழந்தைப்பருவம்”
- மில்டன்-
குழந்தை வளர்ப்பை நாம் இரண்டு காலகட்டங்களாகப் பிரித்து நோக்குவது பொருத்தப்பாடுடையது;
01) தாயின் வயிற்றில் கரு உருவாகியதிலிருந்து குழந்தை பிறக்கும் வரையான காலகட்டம்.
02) குழந்தை பிறந்ததன் பின், அது வளர்கின்ற காலகட்டம்.
தாயின் வயிற்றில் கரு உருவாகியதிலிருந்து குழந்தை பிறக்கும் வரையான காலகட்டம்.
ஆணும் பெண்ணும் உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றுபட்டு குதூகலமான இன்பமான குடும்ப வாழ்வு வாழ்வதற்க்கு குழந்தைச் செல்வம் தேவைப்படுகின்றது. உடலால் இணைந்த தாய் தந்தையர்களுக்கு அன்பான பாசப் பிணைப்பை ஏற்படுத்த, ஆண்டவன் அளித்த பெரும் சொத்து குழந்தை. இக் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போதே சில விடயங்களைக் கற்றுக் கொள்வதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இங்கு கற்ற விடயங்கள் குழந்தையின் எதிர்கால வாழ்வையே நிர்ணயிக்க வல்லது என்கின்றனர் அறிவாளர்கள். குழந்தை தாயின் கருப்பையில் இருக்கும் போது உடல் மீதும், உளம் மீதும் ஏற்படும் மாற்றங்கள் குழந்தையின் உடல் மீதும், உளம் மீதும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன.
ஆரோக்கியம்;
தாயின் வயிற்றில் உண்டாகும் கருவானது ஆரோக்கியமாக வளர்வதற்கு தாயின் ஆரோக்கியம் முக்கியம் என்கின்றனர் மருத்துவர்கள். கருவுற்றிருக்கும் தாய்க்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கக்கூடிய நல்ல சத்துள்ள பழங்கள், உணவு என்பனவற்றை தவறாமல் கொடுக்க வேண்டும். பசளி, மாதுளை, பால் போன்றவை தாய்க்கு சிறந்த ஊட்டச்சத்தை வழங்குகின்றது. இக்காலப்பகுதியில் சில பெண்களுக்கு குமட்டல் ஏற்படுவது வழக்கம். அதற்காக வயிற்றை மட்டும் எப்பொழுதும் வெறுமையாக வைத்திருக்கக் கூடாது, உள்ளே ஓர் உயிர் இருக்கிறது, அதற்கும் தேவை என்று சாப்பிடமுடியாவிட்டாலும் கொஞ்சமாவது சாப்பிடவேண்டும். இக்காலப்பகுதியில் கடினமான வேலைகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.அதற்காக அறவே வேலை செய்யாமல் இருந்து விடவும் கூடாது. அது சோம்பேறித்தனத்தை கொண்டுவரும். கர்ப்பகாலத்தில் பெண்கள் இலகுவான வேலைகளைக் கட்டாயம் செய்ய வேண்டும் அது பிரசவ வலியைக் குறைக்கும், குழந்தைக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள்.
கர்ப்பகால உடலுறவு
குழந்தை வயிற்றில் இருக்கும் போது முரட்டுத்தனமான உடலுறவு முறைகளைத் தவிர்த்தல் வேண்டும். கர்ப்பம் தரித்தபின் உடலுறவு கொள்வதை விலங்குகள் செய்வதில்லை. பூனைமட்டும் இதற்கு விதிவிலக்கு. பாலூட்டியினங்களில் மனிதன் மட்டுமே கர்ப்பகால உடலுறவுகளில் ஆர்வமுள்ளவனாக இருக்கின்றான்.
கர்ப்பம் தரித்த காலத்தில் பெண்களின் காம உணர்வு குறைந்தே காணப்படும். ஆனால், கர்ப்பகாலத்தில் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரையும் பெண்களின் காம ஆர்வம் அதிகரித்தேயிருக்கும். கருவிலிருக்கும் குழந்தையை உடலுறவு பாதிக்குமா என்ற ஐயம் பெரும்பாலான ஆண்களிடம் இருக்கின்றது. கர்ப்பத்தின் தொடக்க கட்டத்தில் கணவன் மனைவியிடம் அதிக அன்பும் உடலுறவில் அதிக ஈடுபாடும் காட்டுவதுண்டு என்கின்றார் “மாஸ்டர்ஸ்”. இவ்வாறான காலங்களில் பாதுகாப்பான மாற்று முறைகளைப் பயன்படுத்தி உடலுறவு கொண்டால் அது தாயின் மனநலத்தையோ, உடல் நலத்தையோ பாதிக்காது. குழந்தையும் வலியின்றி பிறக்க உதவும் என்றும் கூறுகின்றது இன்றைய வைத்திய உலகம்.
மனநலப் பாதிப்பு
தாய்மை அடைந்திருக்கும் தனது மனைவி விடயத்தில் கணவன் மிகவும் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும். தாயின் மனநலத்தைப் பாதிக்கக்கூடிய எந்த விதமான வார்த்தைப் பிரயோகங்களிலோ நடவடிக்கைகளிலோ ஈடுபடக்கூடாது. தாய்க்கு ஏற்படும் மனநலப்பாதிப்பு குழந்தைக்கும் வரக்கூடிய சாத்தியக் கூறுகள் நிறையவே இருக்கின்றன என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.
அதிர்ச்சி தரக்கூடிய எந்த செய்தியையோ உடனடியாக வெளிப்படுத்தக் கூடாது. அது தாய்க்கும் சேய்க்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். “உன் அம்மா இறந்து விட்டார்” போன்ற அதிர்ச்சி தரக்கூடிய விடயங்களைத் திடீர் என்று கூறுவதைத்’ தவிர்க்கவும். திடீர் அதிர்ச்சிச் செய்தியால் சிலவேளையில் மாரடைப்பு ஏற்பட்டு, தாயும் சேயும் இறக்கவேண்டிக் கூட நேரலாம்.
உடல் நலத்தேவைகள்
கர்ப்பகாலத்தில் தாய்மார் விரதம் இருப்பதை இயன்றளவு விலக்குவது நல்லது. அது குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். தாயின் உடலின் போசாக்கு மட்டம் குறைவடைய குழந்தைக்குக் கிடைக்கும் உணவும் வீழ்ச்சியடையும். இதனைத் தாய்மார் நன்கு புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். அடிக்கடி மருத்துவர்களின் ஆலோசனைகளைக் கேட்பது நல்லது. ஆர்வ மிகுதியினால் தமக்குக் கிடைக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என அறிவதற்கு “ஸ்கான்” பண்ணி பார்க்கும் முறையை நிறுத்துங்கள். ஆண் குழந்தையை எதிர்பார்க்கும் பெற்றோர்களுக்கு தமக்குப் பிறக்கப் போகும் குழந்தை பெண் குழந்தை என்று தெரிந்தால் ஒழுங்கான பராமரிப்பினைக் காட்டமாட்டீர்கள். அத்துடன், ஸ்கான் பண்ணுவது தாய்க்கும் குழந்தைக்கும் பல எதிர்கால நோய்களையும் ஏற்படுத்தக்கூடும்.
சஞ்சலங்களை தவிர்த்தல்
தாய், தந்தையரிடையே பல பிரச்சினைகள் எழலாம்,வாக்குவாதங்கள் ஏற்படலாம். ஆனால், அது தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும் தாய், கருவுற்றிருக்கும் போது
குடும்பத்தினரிடம் ஏதோ ஒரு காரணத்துக்காக மற்றவர்களுடன் எரிந்து விழுவது,சண்டை பிடிப்பது, பொறாமைப்படுவது, விரக்தி கொள்வது, ஒதுங்கி இருப்பது, அருவருப்புப் படுவது போன்ற குணங்கள் இருக்கக் கூடாது. கணவனும் மனைவியை துன்புறுத்தவோ, அடிக்கவோ, மனச் சஞ்சலத்துக்கு உள்ளாக்கவோ ஒருவருக்கொருவர் அன்பாகவும,; பாசமாகவும,; சந்தோசமாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல சமூகப்பண்புள்ள பாசமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். சில ஆய்வுகளின்படி கர்ப்பகாலத்தில் தாயில் ஏற்படும் குணவியல்புகள் பிறக்கும் குழந்தைகளின் குணவியல்புகளுடன் ஒத்திருப்பதாக கூறப்படுகிறது.
02) குழந்தை பிறந்ததன் பின் அது வளர்கின்ற காலகட்டம்.
தாய்ப்பால்
தாய்ப்பால் குழந்தைக்குப் பல வழிகளிலும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. குழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது என புதிய ஆராய்ச்சியின் முடிவொன்றை பிரான்சிய ஆராய்ச்சியாளார்கள் கூறியுள்ளனர். தாய்ப்பால் குடித்து வரும் குழந்தைகள் வலிகளைத் தாங்கும் வலிமை உடையவர்களாக வளர்வார்கள் என்பது கனடா மருத்துவர்களின் ஆராய்ச்சி முடிவாகும். தாய்ப்பாலில் இருக்கும் அமிலத்தன்மை “என்டோபிள்” எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே இதற்குக் காரணமாகும் எனவும் கூறியுள்ளனர்.
பெரும்பாலான தாய்மார் தமது குழந்தைகளுக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்கின்றனர். சில வாரங்களின் பின்னர், பல்வேறு காரணங்களைக்காட்டி நிறுத்தி விடுகின்றனர் என அமெரிக்க ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தமது அழகு கெட்டுவிடும் என்று நாகரீகப் பெண்கள் நினைப்பது தப்பானது. மாறாக, தாய்ப்பால் கொடுக்கும் போது தாய், மார்பகப் புற்று நோயில் இருந்து தப்பித்துக் கொள்வதுடன், அளவுக்கதிகமான பாச உணர்வையும், அமைதியையும், பூரிப்பையும் பெற்றுக்கொள்கிறாள். இங்கு தாய் குழந்தைக்கு தாய்ப்பாலை மட்டுமல்ல அன்பையும் சேர்த்தே கொடுக்கின்றாள்.
பிரசவ காலத்தில் நிகழும் உதிரப் போக்கை கட்டுக்குள் வைத்திருக்கின்றது, கருப்பை தனது பழைய நிலைக்கு திரும்புவதற்கு பாலூட்டுதல் பெருமளவு துணைபுரிகிறது. தாய்க்கும் குழந்தைக்கும் உன்னதமான உறவைப் பாலூட்டுதல் ஏற்படுத்துகிறது. உலகில் குழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் வராத உணவு ‘தாய்ப்பால’; என்பதைப் பெருமைபடக் கூறுவேன்.
உணவு
சிறு குழந்தைக்கு உணவு ஊட்டுவதில் கூட பெற்றோர்கள் பல்வேறு தடைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. “சில குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவதென்பது ஒரு போராட்டம்”, “சில குழந்தைகளுக்குக் கூடுதலாக உண்பதென்பது ஒரு நோய்” இரண்டையும் எதிர்கொள்வது கடினமானது.
குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் உணவு கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தும், குழந்தை உணவு உண்ண மறுக்கின்றது என்றால் குழந்தைக்கு ஏதோ நோய் இருக்கிறது. அல்லது, பெற்றோரின் கவனத்தைத் தன்பக்கம் இழுக்க நினைக்கின்றது என்பதுதான் அர்த்தம். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு உணவளிக்கும் போது நிதானமாக செயற்பட வேண்டும். குழந்தையைச் சாப்பிட வைப்பதற்காகப் ‘பேய்’ வருது, ‘பிசாசு’ வருது,பிடித்துக் கொடுத்திடுவோம் என்று பயமுறுத்தக் கூடாது. தன்மையான முறையில் அணுக வேண்டும். அதற்காக, வெகுவாகப் புகழ்ந்துரைக்கவும் கூடாது. அவ்வாறு செய்தால் ஒவ்வொரு முறை சாப்பிடும் போதும் தன்னைப் புகழ்ந்துரைத்தால்த்தான் சாப்பிட வேண்டும், என்ற தவறான எண்ணம் குழந்தையின் மனதில் ஏற்பட்டுவிடும்.
சரியான நேரத்தில் குழந்தைக்கு உணவளிக்க வேண்டும். குழந்தைக்கு உணவு கொடுக்கும் போது குறைந்த அளவே பாத்திரத்தில் இட வேண்டும். இவ்வாறான அணுகுமுறை குழந்தைக்கு உணவின் மீது உள்ள வெறுப்பை இல்லாமல் செய்து குழந்தை விருப்போடு இன்னும் வேண்டும், வேண்டும் என்று ஆசைப்பட்டு உண்ன வழிவகுக்கும்.
மருத்துவம்
மருத்துவரின் உதவியின்றி, ஆலோசனையின்றி குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கக் கூடாது. அது குழந்தைகளுக்கு உயிராபத்துக்களை ஏற்படுத்தி விடலாம். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தை மட்டும் பயன்படுத்துங்கள். நோய் குறைந்து விட்டது என்பதற்காக மருந்து கொடுப்பதை இடையில் நிறுத்தி விடாதீர்கள். அது மீண்டும் குழந்தைக்கு நோய் வரும் வாய்ப்பை ஏற்படுத்தி விடலாம். ஒரு குழந்தைக்கு வாங்கிய மருந்தை, அதே போன்ற நோய் என்பதற்காக இன்னொரு குழந்தைக்கு வழங்கக் கூடாது. நோயின் அறிகுறி ஒன்றாக இருந்தாலும், உண்மையில் வேறு நோயாக இருக்கக்கூடும். முக்கியமாக, பெரியவர்களுக்கு வழங்கிய மருந்துகளை அதேநோய் என்பதற்காக குழந்தைகளுக்கு வழங்குவது வெறும் முட்டாள்த்தனமானது. அத்துடன், மருந்து கொடுக்க முற்படும் போது குழந்தை குடிக்க மறுக்கின்றது என்பதற்காக ஐஸ்கிறீம் என்பவற்றுடன் கலந்து கொடுப்பதாயின் மருத்துவரின் உதவியை நாடுங்கள். குழந்தை வளர்ப்பில் வெற்றி பெறுங்கள்.
சூழலைக் கற்றல்
சிறு குழந்தைகளைச் சற்று கவனித்துப் பாருங்கள். அதிலும், அவர்கள் நடவடிக்கைகளைச் சற்றுக் கவனியுங்கள். அவர்களின் புன்னகையின் பின்னணியை ஊடுருவி நோக்குங்கள். மிகப்பெரிய ஆச்சரியம் மேலிடும். தன் தாயும் தந்தையும் பேசும் உரையாடல்கள், கைகளை ஆட்டிப் பேசும் விதம் ஆகியவற்றை உன்னிப்பாகப் பார்த்து மகிழ்வதும், கைகளை அசைத்துத் தன் எண்ணங்களை வெளிப்படுத்துவதும், தட்டுத் தடுமாறி பேச முனைவது போன்ற நிகழ்வுகள் எல்லாம் தமக்கு அருகாமையில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்துத்தான். குழந்தை பேசுவதற்கு முன்பாக செய்யும் வேலை மற்றவர்களை உற்றுக் கவனிப்பது. எனவே, இப்பருவத்தில் குழந்தைகளுக்கு நல்ல செயல்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
தாயும் தந்தையும் சண்டை போடுதல், கெட்ட வார்த்தைகளால் திட்டுதல், கோப உணர்வு போன்ற துர்நடத்தைகளைக் குழந்தைகள் முன்னிலையில் வெளிப்படுத்துவதினைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் மத்தியில் நடக்கும் தவறான பேச்சுக்கள், சண்டைகள் குழந்தைகளின் மனதில் பதிந்து, பின்நாளில் பெரும் விபரீதமாய் உருவெடுத்து குடும்ப நிம்மதியையே அது கெடுத்துவிடும். தாய் தந்தையர் குழந்தைகளிடம் அன்பாகப் பேசி பண்பாகப் பழகினால்த்தான் குழந்தைகளும் அன்பு, பாசம், சகோதரத்துவம் கொண்டவர்களாக, சிறந்த ஆளுமை கொண்டவர்களாக உருவாகுவார்கள்.
கல்வியும் விளையாட்டும்.
“குழந்தையை படிக்க வைப்பதென்பது ஒரு பெரிய கலை”, “குழந்தையின் முதற் பள்ளிக்கூடம் ‘தாயின் மடி’” என்பார்கள். சின்னச் சின்ன விடயங்களையும் தாயின் அரவணைப்பிலிருந்தே குழந்தை கற்றுக்கொள்கிறது. தாயின் முந்தானையைப் பிடித்துத் தவழ்ந்து சூழலைக் கற்ற குழந்தை, தாயைப் பிரிந்து பள்ளிக்குச் செல்வதென்பது பிள்ளையைப் பொறுத்தவரையில் கடினம்தான். எனவே, பள்ளியில் இருந்து வந்தவுடன் பாசமாகப் பேசுங்கள். “ரீச்சர் என்ன சொல்லித்தந்தவா, சொல்லு” என்று கேட்டுத் தொந்தரவு செய்யாதீர்கள், இளைப்பாற விடுங்கள். பின்னர், குழந்தையின் படிப்புப் பற்றிக் கேளுங்கள், தன்மையாக எடுத்துச் சொல்லுங்கள்.
விளையாட்டு போன்ற மனதுக்குச் சந்தோசமான செயல்களில் ஈடுபட அனுமதியுங்கள். அது குழந்தைகளின் உற்சாகத்துக்கும், குழு உணர்வுகளை வளர்ப்பதற்கும் உதவும். குழந்தை படிக்கவில்லை என்நேரமும் விளையாடுகின்றான் என்று ஏசாதீர்கள்.
“கண்ணா படிப்புத்தான் உனக்கு
இனிமையான வாழ்க்கையை வாங்கித் தரும்”
என்று தன்மையாகக் கூறுங்கள். விளையாட்டுக்கென்றே நேரம் ஒதுக்குங்கள், குழந்தை விளையாடும் இடத்துக்கு நீங்களும் செல்லுங்கள். அவர்கள் தரையில் அமர்ந்தாலும், மணலில் புரண்டாலும், சேற்றில் குதித்தாலும் அவர்கள் அருகில் அமர்ந்திருந்து உரையாடுங்கள். குழந்தைகள் பேசுவதை கவனமாகக் கேட்டு பதிலளியுங்கள். அதனைக் குழந்தைகள் அதிகம் விரும்புவர். அது அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வினையும் வளர்க்கும். குழந்தைகளின் பேச்சுக்கள் கவனிக்கப்படாமல் இருக்கும் போதுதான் அவர்கள் மனரீதியாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
மரியாதையை எதிர்பார்த்தல்
மரியாதை என்ற பதம் குழந்தை, பெற்றோர் உறவில் மிகவும் சிக்கலானது. குழந்தையிடத்தில் மரியாதையை எதிர்பார்க்கின்ற பெற்றோர்கள், சிறு குழந்தையாக இருக்கும் போதிருந்தே அதனைக் கவனத்தில் எடுக்க வேண்டும். சிறு வயதுக் குழந்தை “டா” சேர்த்தோ, “நீ” சேர்த்தோ “என்னடாப்பா சொக்லட் வாங்கித் தாவன்டா”, “என்ன நீ மட்டும் திண்ணுறாய்” என்று கூறும் போதும், இதைவிட தகாத வார்த்தைகளைக் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து, அதனை விளிக்கும் குழந்தையை உற்சாகப்;படுத்தி ரசிக்கின்ற பெற்றோர்கள், குழந்தைக்கு 5 வயதோ, 6 வயதோ தாண்டுகின்ற போது தன்னை மதிக்கவில்லையே, இவன் மதிக்காமல் கதைக்கிறான் என்று குழந்தையை நையப்புடைப்பதில் அர்த்தமில்லை. இந்த நேரத்தில் குழந்தை தனது நடத்தையை மாற்றிக் கொள்ளத் தடுமாறும்,மனச்சஞ்சலத்துக்கு உள்ளாகும் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்.
உணர்வுகளை மதித்தல்
குழந்தைகள் எதைப்பேசினாலும், அலட்சியப்படுத்தாமல் அவர்களது கோரிக்கைகளை செவிசாய்த்துக் கேட்பதோடு, முக்கியமாக அவர்களது உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். சிரித்தால், சேர்ந்து சிரியுங்கள், ஏன் சிரித்தாய் என்று காரணம் கேளுங்கள். அழுதால், ஏன் அழுதாய் என்று காரணம் கேளுங்கள், அடிக்காதீர்கள், அன்புகாட்டுங்கள், ஏளனம் செய்யாதீர்கள,; அது அப்பிஞ்சு உள்ளத்தைப் பாதிக்கும். நீங்கள் சுக போகமாய் ஆடம்பரமாய் வாழாவிட்டாலும், பரவாயில்லை குழந்தைகளின் சின்னச் சின்ன ஆசைகளை எல்லாம் நிறைவேற்றுங்கள். மழலை மொழியில் மகிழ்ந்திடுங்கள்.
“யாழ் இனிது குழல் இனிது என்பார்கள்
மழலை மொழி கேளாதோர்”
என்பார்கள். “சந்தோசத்தை ஆண்டவனிடம் தேடாதீர்கள், உங்கள் பிஞ்சுக் குழந்தைகளிடம் தேடுங்கள்”. நீங்கள் குழந்தையாய் இருக்கும் போது, சில சின்னச் சின்ன சந்தோசங்கள் கூட உங்களுக்குக் கிடைக்காமல் இருந்திருக்கலாம், அதை உங்கள் பிள்ளைகளுக்குப் பெற்றுக் கொடுங்கள். அதைப்பார்த்து நீங்களும் இழந்த இன்பத்தைப் பெற்றது போன்ற உணர்வடைவீர்கள்.
அவமானப்படுத்தக் கூடாது
உங்கள் குழந்தைகளை அடுத்தவர் முன்னிலையில் ஒருபோதும் பேசி, திட்டி அடித்து விடாதீர்கள். அது அவர்களுக்குள் ஆறாரணத்தைத் தந்து விடுவதோடு, தாழ்வு மனப்பான்மையையும் வளர்த்து விடுகின்றது. இதனால், தற்கொலை முயற்சியில்க் கூட ஈடுபட வாய்ப்புள்ளது. தாராளமாக மற்றவர் முன்னிலையில் உங்கள் குழந்தையைப் பற்றி பெருமிதத்துடன் அவர்களின் திறமைகளைக் கூறலாம். அவை பல நன்மைகளைத் தரும். அவர்களுக்கு அது நல்ல ஊக்கியாக அமையும். குழந்தைகள் தங்களைப் பாராட்டுவதைப் பெரிதும் விரும்புவர்;. குழந்தைகள் செய்யும் சிறுசிறு செயல்களுக்கும் அவர்களைப் பாராட்டுங்கள். தொடர்ச்சியாகப் பாராட்டிய நீங்கள், மெது மெதுவாக அவர்கள் விடும் பிழைகளை அன்பாக எடுத்துக்கூறுங்கள், திருந்திக் கொள்வார்கள். அப்படியும் திருந்தவில்லையோ, இறுதியாகக் கொஞ்சம் அதட்டிச் சொல்லுங்கள், அன்றே திருந்தி விடுவார்கள். பின்னர், நீங்கள் கூறும் அத்தனை சரி, பிழைகளையும் மனம் நோகாது ஏற்கும் பக்குவத்தை அவர்கள் இயல்பாகவே பெறுவார்கள். ‘ஆறு தடவை பாராட்டினால் ஒரு தடவை அவர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டலாம்’ என்னும் கணக்கு சிறந்தது என்கின்றனர் உளவியலாளர்கள்.
தோல்விகளை எதிர்கொள்ளப் பழக்குதல்.
குழந்தைகளுக்குத் தோல்விகளையும் பழக்குங்கள், கேட்பதை எல்லாம் கொடுப்பதோ, சொல்வதை எல்லாம் செய்வதோ மிகவும் தவறானது. அத்தகைய குழந்தைகள் திடீரென ஏற்படும் சின்னத்தோல்வியைக்கூட சந்திக்க முடியாமல் முடங்கிப் போவார்கள். எனவே, தோல்விகளைப் பழக்குங்கள். ‘தோல்விகளும், வெற்றிகளும் கலந்ததே வாழ்க்கை’ என்ற தத்துவம் அவர்களுக்குப் புரிய வேண்டும்.
தன்னுடன் படித்தவர்கள் பலர், மேல் வகுப்புக்குப் போய்விடும் போது அதே வகுப்பில் வகுப்பேற்றப்படாமல் இருக்கின்ற மாணவன் ஒருவகையான மனஉளைச்சலுக்கு உள்ளாகின்றான். அதே சமயம், அவனுக்குப் பிறருடைய ஏளனத்தையும் சந்திக்கவேண்டி உள்ளது. இவை சிறு வயதுப் பிள்ளைகளிடம் படிப்பிலே வெறுப்பை ஏற்படுத்தி விடுகின்றது. தோல்விகள் இயற்கை என்பதை உணர்ந்து, அதனால் துவண்டு விடாமல் மன உறுதியோடு அதிகமாகக் கவனம் செலுத்திக் கற்றால், வெற்றிபெற்று விடுவது சுலபம். எனவே, என் பிள்ளை சோர்வடையக் கூடாது, என் பிள்ளையாலும் சாதிக்க முடியும் என்று தட்டிக் கொடுக்க வேண்டியவர்கள் பெற்றோர்கள். மாறாக, நீ ஏன் வகுப்பேற்றப்படவில்லை, பக்கத்துவீட்டுப்பையனால் முடிந்தது, ஏன் உன்னால் முடியவில்லை. எனக்கேட்டு அடிப்பதனாலேயோ. சித்திரவதைப்படுத்துவதனாலேயோ. குழந்தைக்கு மன உளைச்சல், எரிச்சல், பயஉணர்வு, விரக்தி என்பனவற்றை ஏற்படுத்துவதைத் தவிர ஒரு பயனும் இல்லை. என்பதைப் பெற்றோர்கள் புரிந்து கொண்டு இந்த விடயத்தில் மிகவும் புத்தி சாதூரியமாகக் குழந்தைகளை வழிநடத்த வேண்டியவர்கள் பெற்றோர்களே.
கணவனும் மனைவியும் ஒருமித்த கருத்தைக் கொண்டிருத்தல்.
குழந்தை வளர்ப்பு விடயத்தில் கணவனும் மனைவியும் ஒரே கருத்தினைக் கொண்டிருக்க வேண்டும். கணவனும் மனைவியும் ஒன்றுபட்ட முடிவை எடுக்க முடியாமையே, குழந்தைகளின் தவறான வழிகாட்டலுக்கு முக்கிய காரணியாகும். அதற்காக, இருவரும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தையிடம் “செய்யாதே” என்று ஒரு செயலை வலியுறுத்துகிறீர்கள் எனின், அதில் நீங்கள் உறுதியாக இருங்கள். கணவன் “செய்யாதே” என்று சொல்ல, மனைவி “செய்யட்டும் பரவாயில்லை” என்று சொல்லிக் குழப்பாதீர்கள். அது உங்கள் குடும்ப அமைதியையே கெடுத்து விடக் கூடும். ஆணும் பெண்ணும் தமது குழந்தை விடயத்தில் ஒரே இணக்கமான முடிவை எடுக்கவேண்டியது அவசியம். இந்த சூழலில்த்தான் குழந்தை பெற்றோரின் முடிவை ஏற்கும் இணக்கமான குழந்தையாக வளரும்.
தன்பாட்டில் விட்டுவிடல்
குழந்தை ஏதாவது சுவாரஸ்யமாக செய்துகொண்டிருந்தால், அது உங்களைப் பாதிக்காத வரையில் கண்டுகொள்ள வேண்டாம். அப்படியே விட்டுவிடுங்கள். உங்கள் சட்டங்களை குழந்தைகள் விளையாட்டில் வரையறை செய்யாதீர்கள். அது அவர்களின் ஆளுமையைப் பாதித்துவிடும். குழந்தையின் போக்கில் குழந்தையை வளரவிடுவது குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். குழதையுடன் அதிக கருத்து வேற்றுமையில் ஈடுபடாமல் இருப்பது மனவருத்தம் ஏற்படுவதைத் தடுக்கும்.
குழந்தைகளிடம் ‘செய்யாதே’ என்று ஒரு செயலை வலியுறுத்தாதீர்கள். செய்யாதே என்று சொல்லும் விடயத்தைச் செய்வதில், எல்லோரையும் விட குழந்தைகள் ஆர்வமாக இருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சில விடயங்களின் ஊடாக தங்கள் தப்பை தாங்களே உணர்வார்கள். “விளக்கு எரியும் போது கை வைத்தால் நெருப்பு சுடும்” என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும் வரைக்கும் கை வைக்கத்தான் செய்வார்கள்.
குழந்தைகளின் சின்னஞ்சிறு வடிவத்தில் எண்ணிறைந்த ஆற்றல்களும், மான்புமிக்க தன்மைகளும் அடங்கிக் கிடக்கின்றன. என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். ஆட்டைப் பற்றித் தெரியாதவன் ஆட்டிடையன் ஆவதும் இல்லை, யானையைப் பற்றித் தெரியாதவன் யானைப்பாகன் ஆவதும் இல்லை அதேபோல் குழந்தைகளின் தன்மை அறியாதவர்கள் சிறந்த குழந்தைகளைப் பெற்று வளர்க்கப்போவதும் இல்லை, சிறந்த பெற்றோர் என பெயரெடுப்பதும் இல்லை. எனவே குழந்தையைப் பற்றி அறியுங்கள் குழந்தை வளர்ப்பில் வெற்றி பெறுங்கள்.
இக்கட்டுரை..
- வாசகர் பார்வை: 2450
- இணைக்கப்பட்டது: Wednesday, October 21 2009 00:00 இணைத்தவர் Administrator [Rathees]
- கட்டுரை இல: 119


















