இலங்கையின் ஈரவலயங்களின் பயிரிடப்படாத சிறிய நிலப்பரப்புக்களில்
வாழ்ந்துவந்த எஞ்சிய யானைகளும் தாழ்நாட்டு உலர்வலயங்களை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கின்றன. சென்ற 200 ஆண்டுகளாக நாட்டின் தென் ஈரவலயங்களில் வேகமாக அதிகரித்த பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மற்றும் குடிப்பெருக்கம் என்பன இதற்கு காரணமாகியிருக்கின்றது எனப்படுகின்றது. ஆசியாவில் 40,000 – 50,000 வரையான யானைகள் இருப்பதாக தெரிவிக்கப்படகின்றது இதில் 10 வீதமானவையே இலங்கையில் இன்று(2008) காணப்படுகின்றன. கடந்த வருடங்களில் ஆண்டு ஒன்றுக்கு...
40 – 50 வரையிலான மனித இறப்புக்கள், வருடம் ஒன்றிற்கு ஏறக்குறைய(இயற்கையான மரணம் உட்பட) 150 வரையான யானைகளின் இறப்புக்கள் என பதிவாகின்றது மனித யானை மோதலின் விளைவுகள். இதைவிட அழிவுக்கு உள்ளாகும் மனித சொத்துக்கள் என நீண்டு செல்கிறது விளைவுகள். உலர்வலயங்களிலும் இன்று யானைகளின் வாழ்விடங்கள் விவசாயிகளினால் அபகரிக்கப்பட்டு வருகின்றது.
தொடரும் வன வளம் அழிப்பு என்பது யானைகளின் வாழ்விடத்துக்கான அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன் மனித யானை மோதல்களையும் தோற்றுவிக்கின்றன. மனித யானை மேர்தல்கள் என்பது என்று விவசாயம் ஆரம்பிக்கப்பட்டதோ அன்றே தொடங்கிவிட்டதாக கருதுகின்றனர் சிலர். ஆனால் என்று விவசாய நிலங்களை அண்டிய மனித சனத்தொகைப்பெருக்கம் ஏற்பட ஆரம்பித்ததோ அன்றே அது தொடங்கிவிட்டதாகவே கொள்ளுதல் சிறந்தது. இதனால் இரண்டு பக்கங்களிலுமே உயிர்ச் சேதங்கள் ஏற்படகின்றது.
வறள் வலய காடுகளில் எஞ்சியிருக்கும் யானைகளின் உணவு நீருக்கான தேடலும் அப்பகுதியின் எல்லைகளில் குடியேறும் ஏழை விவசாயிகளின் விவசாயத்துக்கான காடழிப்பும் மனித யானை மோதல்களின் அடிப்படைகளாக இருக்கின்றன. கொட்வெகர, கலேகம, நவகட்டேகம, கிரிபவ, ககல பல்லேகல போன்ற சில பகுதிகளை மனித யானை மோதல்களினால் உயிர்ச்சேதங்கள் எற்பட்ட சிலபகுதிகளுக்கு உதாரணமாகும். (லக்மாலி -2008) யானைத்தந்தங்களுக்காக யானைகளை கொலை செய்தல், நஞ்சு கலந்த உணவின் மூலம் கொல்லுதல், குட்டி பிறப்பின் போது ஏற்படும் நோய்கள், மின்சார அதிர்ச்சி எற்படுத்தல், புகையிரதங்களுடன் மோதுதல் போன்றன இலங்கையில் யானைகளின் இறப்புக்கள் தொடரும் வழிகளாகும்.
தொடரும் மனித யானை முறுகல்கல்களை சீர் செய்வதற்கு இரண்டு பக்கமும் காணப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைக்கவேண்டியது அவசியமாகும். யானைகளின் வாழ்விடங்களையும் அவற்றின் உணவுத்தேவையினையும் ஈடுசெய்யக்கூடிய வகையில் புதிய தேசிய பூங்காக்களை நிறுவுதல், யானைகளுக்கான பாதுகாப்பு வலயங்களை உருவாக்குதல், அவற்றின் வாழ்விடங்கள் அபகரிக்கப்படுவதை நிறுத்துதல், பாதுகாக்கப்பட்ட வனங்களின் எல்லைகளை விரிவாக்குதல் போன்றன மூலம் யானைகளின் தேவைகளை முடியுமான வரை நிறைவுசெய்வதற்கு குறிப்பிட்ட பிரிவினர் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும் இப்பிரச்சினையினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும். யாணைகளின் வாழ்விடங்களை அண்மித்து பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் வாழ்க்கையினையும் அவர்தம் உடமைகளையும் பாதுகாப்பதற்கு யானைகளுக்கு எதிரான மின்சார வேலிகளை அமைப்பதே தற்போதைக்கு பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தீர்வாக நோக்கப்படுகின்றது.
நாடளாவிய ரீதியில் யானைகளின் முகாமை என்பது இலங்கையினை பொறுத்தவரையில் இன்று கட்டாயமானது. உண்மையில் நாட்டில் தற்போது உள்ள யானைகள் தொடர்பான தகவல்களும் போதுமானவை அல்ல (லக்மாலி -2008). புதிய தொழில்நுட்பங்கள் (புவியியல் தகவல் முறைமை) இலங்கையில் யானைகளின் வாழ்விடங்களை பாதுகாப்பதில் பயன்படுத்தப்பட வேண்டும். யானைகள் அனாதையாக்கப்படுவதில் விசேட கவனங்கள், மக்கள் குடியிருப்புக்களை வறள்வலய காடுகளை அண்டி ஏற்படுத்தும்போது யானைகளின் வாழ்விடம் தொடர்பான விசேட கவனம் செலுத்துதல் போன்றன மூலமும் நாட்டில் மனித யானை முறுகல்களை முடியுமானவரை தவிர்த்துக்கொள்ள முடியும்.
















