| Article Index |
|---|
| சூழல் தொகுதி - ஒழுங்கமைப்பு |
| PAGE 2 |
| All Pages |
உயிர்களின் ஒழுங்கமைப்பு அல்லது வாழ்க்கை சிக்கலானதும் வித்தியாசமான நிலைகளில்
ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்ற ஒரு அம்சமாகும். இந்த வாழ்க்கை நிலைத்திருப்பதற்கு சூழலில் ஒரு தொகுதி இன்றியமையாதது. ஆகவே அந்தத் தொகுதி இனங்கள், மக்கள், சமூகங்கள் என்பவற்றைக் கொண்டு ஒரு பரந்த சூழற்றொகுதியாக உருவாகின்றது. புவியானது நீண்ட காலம் நிலைத்து நிற்க ...
பல கோடிக்கணக்கான உயிரினங்களின் நிலைபேற்றுத் தன்மைக்கு ஆதாரமாக இருப்பதற்கு இயற்கைச் சூழலில் காணப்படுகின்ற சமநிலையே காரணமாகும். பொதுவாக சூழற்றொகுதிகள் யாவும் மிகமுக்கியாக நீர், மண், வளிமண்டலம், ஞாயிற்றுக் கதிர்வீசல் மற்றும் உயிரினத் தொகுதி அனைத்தும் கொண்டவை சூழற்தொகுதியாகும். சுருக்கமாகக் கூறுவோமானால் குறித்த ஒரு பிரதேசத்தில் இருக்கும் எல்லா அங்கிகளும், அந்த அங்கிகளுடன் இடைத்தாக்கங்களைக் காட்டும் அப்பிரதேசத்தில் அமைந்த உயிரில்லாத சூழலும் உள்ளடங்கிய செயற்பாட்டுப் பிரிவு அப்பிரதேசத்தின் சூழற் தொகுதி எனப்படும். நீர் அல்லது புவிச்சூழற் தொகுதிக்கு சக்தி சூரியனிலிருந்து மாத்திரமே கிடைக்கின்றது. நீர்ச் சூழல் தொகுதிக்கு சமுத்திரம் ஓர் உதாரணமாகும். அதே போன்று புவிச் சூழற் தொகுதிக்கு ஓர் உதாரணமாக சிங்கராஜ வனத்தைக் குறிப்பிடலாம்.
- இயற்கைச் சூழற் தொகுதி:- காடு, புதர், புல்நிலம்
- நீர்ப்பரப்பு சூழற் தொகுதி:- சமுத்திரங்கள், உள்நாட்டுக் கடல்கள்
- ஈரநிலச் சூழற் தொகுதி:- ஆறு, ஏரி, குளம், முருகைக் கற்பாறை, கடற்கரை தாவரம், சேற்று நிலங்கள்.
- மானிட சூழற்றொகுதி:- மீள்நடப்பட்ட காடு, பயிhநிலம், காடு, வீட்டுத் தோட்டம், பெயர்ச்சிப் பயிர்செய்கை, நெல் வயல்கள், மின் தொட்டிகள், நீர்த் தேக்கங்கள்.
- உயிரின மண்டலம் :-
புவி மீது வாழும் எல்லா அங்கிகளும் அவற்றுடன் இடைத்தாக்கம் புரியும் உயிரில்லாத சூழலும் சேர்ந்து அமைக்கும் மிகப்பெரிய செயற்பாட்டுத் தொகுதி உயிரின மண்டலம் எனப்படும். புவிக் கோளில் உயிர் உள்ள பகுதி உயிரினமண்டலம் ஆகும். முழுப் புவியிலும் தனி உயிரின மண்டலமே இருக்கின்றது. புவி மீது உள்ள எல்லாச் சூழற் தொகுதிகளும் அதில் அடங்கும்.
புவிமீது வாழும் தாவரங்கள், விலங்குகள், நுண்ணங்கிகள் ஆகிய யாவும் உயிரின மண்டலத்தின் உயிர்க் கூறுகளாகும். இங்கே வளிமண்டலமும் புவியின் மேற்பரப்புப் படையும் அங்கிகளுடன் பொருள்கள் பரிமாறிக் கொள்ளப்படும் ஆழம் வரைக்கும் மண்படையும் உயிரற்ற சூழலைச் சேர்ந்தனவாகும்.
புறத்தேயிருந்து வளிமண்டலத்திற்கு மின்காந்த அலைகளாகச் சூரியனிலிருந்து வரும் ஒளிச் சக்தி மாத்திரம் கிடைக்கின்றது. உயிரின மண்டலத்திலிருந்து புறத்தே பாய்ந்து செல்வது சக்தி மாத்திரமேயாகும். அது புவியிலிருந்து வெளியேறும் வெப்ப சக்தியாகும்.
ஒரு உயிரினத் தொகுதியில் உயிருள்ள கூறுகளுக்கும், உயிரற்ற கூறுகளுக்கும் இடையிலான தொடர்பு பற்றி நாம் கீழேயுள்ள விளக்கப்படத்தினை ஆதாரமாகக் கொண்டு நோக்குவோமாயின் இங்கு சூரியன் உற்பத்தியாக்கியான தாவரத்திற்கு ஒளி வழங்;குவதுடன் வளியிலுள்ள காபனீரொட்சைட் உம் ஒளித்தொகுப்பிற்கு உதவுகின்றது. அத்துடன் தாவரங்களின் வளர்ச்சிக்கு நீரும் மண்ணும் பெரும் உதவி புரிகின்றன. இவை அனைத்தும் உயிரற்ற கூறுகளாகும் இவை உயிருள்ள தாவரங்களுடன் நேரடியாக தொடர்பு படுகின்றன.
அதேபோன்று விலங்குகளின் வளர்ச்சியில் நீர், வளியிலுள்ள ஒட்சிசன் மற்றும் உயிர்வாழ்க்கை நிலவுவதற்கு மண்ணும் துணை புரிகின்றன. மேலும் தாவர விலங்குகள் இறந்து அவை மீண்டும் தாவர போசனைகளாக மண்ணில் உக்கலாக மாறுவதற்கு பிரிகையாளர்கள் உதவுவதுடன் பிரிகையாளர்களுக்கு இச்செயற்பாட்டை புரிவதற்கு மண், நீர் ஆகியன துணை புரிகின்றன.
தன்மை அடிப்படையில் பலதரப்பட்ட பரந்த சூழல் தொகுதிகள் காணப்பட்ட போதிலும் அவை பொதுவான ஒரு அமைப்பினாலும் தொழிற்பாட்டினாலும் பொதுமைப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறான சூழலியல் தொடர்புகள் இரு பிரதான கூறுகளை உள்ளடக்கியுள்ளன.
- உயிரற்ற கூறுகள்
- உயிருள்ள கூறுகள்.
- உயிரற்ற கூறுகள்:-
வளிக்கோளம், நீர்க்கோளம், நிலக்கோளம் என்பன சூழல் தொகுதியில் பிரதான உயிரற்ற கூறுகளாகும். வளிமண்டலம் பலவிதமான வாயுக்களைக் கொண்டுள்ளது. நைதரசன், ஒட்சிசன், காபனீரொட்சைட் ஆகியன பிரதானமாக வளிமண்டலத்தில் காணப்படுகின்றது. நீர்மண்டலம் சமுத்திரங்கள் மேற்பரப்பு நீர்நிலைகள் என்பவற்றைக் கொண்டுள்ளது. அதே போன்று நீர்க்கோளத்திலிருந்து நீர் பிரதானமாகக் கிடைக்கின்றது. நிலக்கோளம் மேல் ஓட்டையும், மேல் மென்மூடிகளான மண் கற்கள் அடையல்கள் என்பவற்றையும் கொண்டுள்ளது.
வளிக்கோளம், நீர்க்கோளம், நிலக்கோளம் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று பலவழிகளில் இணைக்கப்பட்டுள்ளதுடன். உயிர்த்தொகுதிகளுடனும் இரண்டறக் கலந்துள்ளது. பிரதான உயிரற்ற கூறுகளான கதிர்வீசல், மண், வளிமண்டலம், நீர் ஆகியவற்றின் பௌதீக இரசாயண இயல்புகள் பல உயிர் வாழும் தொகுதிகளைப் பாதிக்கின்றன.
















